Sunday, November 17, 2013

இயேசுநாதரின் 12 சீடர்கள்!

இம்மானிட குலத்தின் மீட்பராக இவ்வுலகில் தோன்றியவர் இயேசுபிரான் என்பதை அறிவோம். இவரை பின்பற்றும் கோடிக்கணக்கானோர் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளனர். இயேசுநாதரின் தோற்றம், பின்னர் அவரது போதனைகளைப் பொறுக்காமல் அவர் சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்தது குறித்தும் ஏற்கனவே அறிந்தோம்.

இந்த கட்டுரையில் இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவருடன் வாழ்ந்து, அவரது போதனைகளைப் பின்பற்றிய 12 சீடர்கள் பற்றியும், அதன்பின் வந்த 2 சீடர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

இஸ்ரேலின் பெத்லகேம் என்னும் ஊரில் சுமார் இரண்டாயிரத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் இயேசுநாதர் இவ்வுலகில் பிறந்தார். இவரின் தந்தை யோசேப்பு, தாயார் மரியாள் ஆவர். 

இயேசுபிரான் வாழ்ந்த முப்பத்து மூன்றரை ஆண்டுகளில் கடைசி மூன்றரை ஆண்டுகள் அவரே தெரிந்தெடுத்த 12 சீடர்கள் அவருடன் இருந்தனர். 

12 சீடர்களின் பெயர்கள் : (மத்தேயு 10 : 2-4)

1. பரிசுத்த சீமோன் (பேதுரு என்று அழைக்கப்பட்டவர்)
2. பரிசுத்த அந்திரேயா
3. பரிசுத்த யாக்கோபு (செபெதேயுவின் குமாரன்)
4. பரிசுத்த யோவான்
5. பரிசுத்த பிலிப்பு
6. பரிசுத்த பர்த்தலேமியு
7. பரிசுத்த தோமா
8. பரிசுத்த மத்தேயு
9. பரிசுத்த யாக்கோபு (அல்பேயுவின் குமாரன்)
10. பரிசுத்த ததேயு
11. பரிசுத்த சீமோன் (கானானியன்)
12. யூதாஸ் காரியோத் (இயேசுவைக் காட்டிக் கொடுத்ததால் இவரின் பெயருக்கு முன்பு பரிசுத்த என்ற வார்த்தை சேர்க்கப்படமாட்டாது.)

யூதாஸ் காரியோத் சீடர் பங்கினை இழத்தல் :

இயேசுநாதரின் போதனைகளை அன்றிருந்த ரோமானிய அரசும், யூத மதவாதிகளும் சிறிதும் விரும்பவில்லை. இயேசுவை பழித் தீர்க்க வகை தேடினர். அவரைப் பிடித்து பழி சுமத்த சதி செய்தனர். இத்திட்டத்தின் படி இயேசுநாதரின் பன்னிரு சீடர்களில் ஒருவனான யூதாஸ் காரியோத்தை அணுகி 30 வெள்ளிக்காசுகளை கொடுத்தனர். இதற்கு கைமாறாக காரியோத், இயேசுநாதரைக் காட்டிக் கொடுக்க ஒப்புக்கொண்டு அதன்படியே செய்தான். ரோமானிய அரசு, குற்றமற்ற இயேசுவின் மேல் பழி சுமத்தியது, இயேசு சிலுவையில் அறையப்பட்டார். 

இப்பாவச் செயலைக் கண்ட யூதாஸ் மனமுடைந்தான். குற்றமில்லா இரத்தத்திற்கு பழியாகிவிட்டதை எண்ணி வேதனையடைந்து தான் வாங்கிய 30 வெள்ளியை வாங்கியவர்களிடம் கொடுக்கச் சென்றான். அவர்களோ மறுத்துவிட, அப்பணத்தை தேவாலயத்தில் எறிந்துவிட்டு தூக்குக் கயிற்றில் உயிர் விட்டான். (மத். 27 : 5)

பின் வந்த 2 சீடர்கள் :

1. பரி. மத்தியா : இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, தம் சீடர்களுக்கு காட்சித் தந்து விடை பெற்றுச் சென்றார். இந்நிலையில் இச்சீடர்கள் தம்முடன் இல்லாத யூதாஸ் காரியோத்துக்குப் பதிலாக மத்தியா என்பவனை 12-ம் சீடனாகச் சேர்த்துக் கொண்டனர். (அப்போஸ்தலர் 1 : 26)

2. பரி. பவுல் : பன்னிரெண்டு சீடர்களைத் தவிர மேலும் ஒருவர் இயேசுநாதரின் மனமார்ந்த சீடனாக வாழ்ந்தார். அவர்தான் பரி. பவுல் என்பவர்.

இவர் இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் இருந்தவர். இவரின் இயற்பெயர் சவுல். தன் இள வயதிலிருந்து யூத மதக் கோட்பாடுகளில் வைராக்கியமுள்ளவராக இருந்தார். சொல்லப் போனால் ஒரு யூத மத வெறியனாகவும் இருந்தார். இயேசுநாதரின் மறைவிற்குப் பின் வந்த தலைச்சிறந்த குழுத் தலைவர்களில் ஒருவரான ஸ்தேவான் என்பவரின் கொலையில் பங்கு உள்ளவர் என்று அடையாளம் காட்டப்பட்டவர்.

தன் 35-ம் வயதில் இயேசுவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். வரலாற்றின்படி கி.பி. 54-68க்கிடையில் நீரோ மன்னனாட்சியில் தியாக மரணமடைந்தார்.

விவிலியத்தில் (பைபிள்) இயேசுநாதர் பிறப்பும், பிறப்பிற்கு பின் நடந்தவைகளை குறித்து எழுதிய நூல்கள் பகுதிக்கு புதிய ஏற்பாடு என்று பெயர். இதில் 27 நூல்கள் உள்ளன. இவற்றில் 13 நூல்கள் பரி. பவுல் எழுதியனவாகும். 

இயேசுநாதர் உரைத்தபடி, அவர் மறைவுக்குப் பின் இறைச் செய்தியை பல நாடுகளுக்கும் ஏந்திச் சென்றவர் பரி. பவுல் என்பதை விவிலியத்தில் காணலாம். 

சீடர்களின் பின்னணி :

பன்னிருவரில் பரி. பேதுரு, பரி. யாக்கோபு, பரி. யோவான் என்பவர்கள் இயேசுவிடம் நெருக்கமானவர்களாகக் கருதப்பட்டார்கள். இதற்குச் சான்றாக இயேசுபிரான் சிலுவையில் அறைவதற்கு நள்ளிரவில் அவரைப் பிடிக்க வந்தபோது அவருடன் இருந்தவர்கள் இம்மூவரே. பரி. அந்திரேயா என்பவர் பரி. பேதுருவின் சகோதரர். இந்நால்வரும் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்தனர். இயேசு இவர்களை தெரிந்து கொண்டு, "என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களை பிடிக்கிறவர்களாக்குகிறேன்" என்றழைத்தார். 

பரி. மத்தேயு சீடராவதற்கு முன் வரி வசூலிப்பவராகயிருந்தார். பன்னிரு சீடரில் பெரும்பாலோர் இஸ்ரேல் நாட்டிலுள்ள, கலிலேயா, கப்பர்நகூம், பெத்சாயிதா பட்டணங்களைச் சேர்ந்தவர்கள்.

தலைவன் எவ்வழியோ சீடர்களும் அவ்வழியே என்பதற்கு ஏற்றாற்போல் இவர்களும் இயேசுநாதர் கொடுத்த அதிகாரத்தின் பேரில் இறை போதனையை செய்யலாயினர். நோயுற்றோரை, ஊனமுற்றோரை, அசுத்த ஆவி பிடித்தோரை குணமாக்கினர். 

பரி. தோமா இயேசுநாதரின் கட்டளைப்படி இறைச் செய்தியை உலகிற்கு அறிவித்தார். இந்திய நாட்டிற்கும் அவர் வந்ததையும், சென்னையிலுள்ள மயிலாப்பூரில் அவர் கொலை செய்யப்பட்டு மரித்தார் என்பதையும் சரித்திர வாயிலாக அறியலாம். 

பரி. சீமோன் (பேதுரு), பரி. யோவான், பரி. மத்தேயு, பரி. யாக்கோபு (அல்பேயுவின் குமாரன்), பரி. ததேயு ஆகியோர் எழுதிய நூல்கள் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் இடம் பெற்றிருக்கின்றன.

பன்னிருவரில் யூதாஸ் காரியோத் இயேசுவைக் காட்டிக் கொடுத்து தூக்கிலிட்டுக் கொண்டான். மற்றவர்களில், பரி. மத்தேயு தவிர எவரும் இயற்கை மரணம் எய்தவில்லை. சிலர் தியாக மரணம் எய்தினர். பலர் சிலுவையில் அறையப்பட்டனர். கி.பி. 100 இறுதிக்குள் சீடர்கள் அனைவரும் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தனர் என்று வரலாறு தெரிவிக்கிறது. 

No comments: