Saturday, November 7, 2015

தீபாவளி

தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி. தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருவர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தையாவது எரித்துவிட வேண்டும்.

 இந்துக்கள் தீபாவளி கொண்டாடுவதற்குப் பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். புராணக் கதைகளின் படி, கிருஷ்ணனின் இரு மனைவியருள் ஒருவரான நிலமகளுக்குப் பிறந்த மகன் ஓர் அசுரன். அப்போது கிருஷ்ணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தான்.

 பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருஷ்ணன் தனது திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான். கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது. இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது. ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதார விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார். 1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர். மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவுகூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர். 

No comments: