Sunday, April 13, 2014

மகாபலிபுரம் பாகம் 2 - Mahabalipuram 2


போன பதிவின் தொடர்ச்சி...


வாங்க! நல்லா சாப்டீங்களா?


சாப்பிட்டாச்சு!  இப்ப என்ன பார்க்கப் போறோம்!


கடற்கரைக் கோயிலுக்கு போலாம், வாங்க!


இந்த கடற்கரைக் கோயில் திராவிடக் கட்டடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டிருக்கு. பாருங்க கடல் அலை எவ்ளோ சீற்றத்தோட இருக்கு. இந்தக் கோயிலைச் சுற்றி கற்களால் ஆன காளை மாடுகள் கோயிலுக்கு அரண் போல இருக்கு.


சரி! இந்தக் கோயிலை யார் கட்டியது?

ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்மன் என்ற மன்னன் தான் இந்தக் கோயிலைக் கட்டினார்.


மேல சொல்லுங்க!



இந்தக் கோயிலின் விமானம் மட்டும் 60 அடி உயரம் இருக்குது.


கிரேன் போன்ற இயந்திரங்களின் உதவியே இல்லாத காலத்தில எப்படிதான் கல்ல அவ்வளவு உயரத்துல தூக்கி வச்சாங்களோ!!!


ஆமா! அது பெரிய ஆச்சரியம்தான். கற்களை சாரம் கட்டி தூக்கி வச்சதா சொல்றாங்க. இந்தக் கோவில்ல சிவனும் விஷ்ணுவும் நமக்கு காட்சிதர்ராங்க. சுவர் முழுவதும் நந்தி உருவத்தை செதுக்கி இருக்காங்க. இந்தக் கோவிலோட சிறப்பே இங்கு செதுக்கப்பட்ட சிற்பங்கள்தான். சாமி கும்பிட்டது போதும்! வாங்க அடுத்த இடத்துக்கு போலாம்..


சரி, சரி அடுத்து எங்க?


வராக குகைக் கோயிலுக்கு போலாம். குகை போன்று இருப்பதால இதுக்கு குகைகோயில்னு பேர் வச்சிருக்காங்க. இந்தக் கோவிலின் உள்ளே விஷ்ணுவின் வராக அவதாரத்தை சித்தரிக்கும் வகையில் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.


மகாபலிபுரத்தில் ஒரே ஒரு குகைக்கோவில்தான் இருக்கா?


மொத்தம் 13 குகைக்கோயில்கள் இருக்கு. இந்தக் கோவில் காலத்தால் சிறப்பு வாய்ந்தது. கோனேரி மண்டபம், மஹிசாசுரமர்த்தினி குகை, வராக மண்டபம், ஆதிவராஹ திருமுர்த்தி குகை மற்றும் கிருஷ்ண மண்டபம் போன்ற பல குகைக் கோயில்கள் இருக்குது.


வாங்க மஹிசாசுர மர்த்தினி குகைக்கோயிலுக்கு போகலாம்.


இந்தக் கோயிலில் மஹிசாசுர மர்த்தினி மகிஷனை வதம் செய்யும் காட்சி ஒரு பக்கமும் பகவான் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கும் காட்சி இன்னொரு பக்கமும் செதுக்கப்பட்டிருக்கு. பாத்துட்டீங்களா?


நடந்து நடந்து கால் வலிக்குதுப்பா! சரி அடுத்த இடத்துக்கு போலாம்.


உங்களுக்கு வெண்ணெய்னா பிடிக்குமா?


ஏதோ கொஞ்சம் சாப்பிடுவேன்.


இதோ பாருங்க இதுதான் கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை. தள்ளுனா உருண்டுடும்னு பயப்படாதீங்க. உங்களால ஒரு துளி கூட தள்ளமுடியாது. இந்தப் கல் பாறை எந்த பிடிப்பும் இல்லாமல் நிற்கிறது. இந்த வெண்ணெயையும் கொஞ்சம் சாப்பிடுங்க.


இருங்க சார்! உருண்டையை தள்ளுற மாதிரி போட்டோ எடுத்துக்குறேன்.


எடுத்தாச்சா? வாங்க புலிக்குகைக்கு போலாம். 



புலிக்குகையா! புலினா எனக்கு பயம். நா வல்லப்பா. ஆள விடுங்க..


புலியெல்லாம் இருக்காது.. பேருதான் புலிக்குகை.



அப்படியா? அப்படின்னா போலாம். வாங்க.


இந்தக் குகை பல்லவர் கால கலாச்சார நிகழ்வுகள் நடப்பதற்காக் திறந்தவெளி அரங்கமா உருவாக்கியிருக்காங்க.  பல பழைமையான சிற்பங்களும் இங்கு இருக்கு. போய் பாத்துட்டு வாங்க.


சரி, மகாபலிபுரத்தோட பிரபலமான சுற்றுலாத் தளங்களையெல்லாம் சுத்திக் காண்பிச்சாச்சு. மகாபலிபுரம் எப்படி இருக்கு.


அருமையா இருக்கு, கற்களில் கலை நயத்தை கண்டது என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது. எப்படியோ ஒரு வழியா பல்லவர்களோட சிற்பக்கலையையும், ரசனையையும் அறிஞ்சுக்கிட்டேன்.சுத்திக் காமிச்சதுக்கு ரொம்ப நன்றி. உங்களுக்கு எவ்ளோ பணம் குடுக்கணும்.


பணம் எல்லாம் வேண்டாம். என் நண்பன் தமிழக சுற்றுலான்னு வலைப்பதிவு எழுதுறான், 
முடிஞ்சா வலைப்பதிவை போய் பாருங்க. பிடிச்சுருந்தா அதுல பின்னூட்டம் போடுங்க.. அதுவே போதும்.


ரொம்ப நன்றி தம்பி. போயிட்டுவர்ரேன்.


என்ன மாமல்லபுரத்தைப் பற்றி தெரிந்துகொண்டீர்களா. அவர் சொன்னது போல மறக்காமல் பின்னூட்டம் போடுங்க..


குறிப்பு :  இந்த இடங்கள் அனைத்தும் மாமல்லபுரத்தில் உள்ளது. ஒவ்வொரு இடமும் மற்ற இடங்களில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது. 


எப்படி செல்வது என்றுதானே கேட்கீறீர்கள்?
1)மகாபலிபுரத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி போன்ற பல இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)அருகில் உள்ள ரயில் நிலையம் :  செங்கல்பட்டு 29 கி.மீ தொலைவில்


3)அருகில் உள்ள விமான நிலையம் : சென்னை 58 கி.மீ தொலைவில்


Tourist Office in Mamallapuram:
Kancheepuram District,
Mamallapuram - 603 104.
Ph: 04114 - 242232
.



திசம்பர் - ஜனவரி மாதங்களில் இங்கு நாட்டியத் திருவிழாவும் நடைபெறும். கிளம்புங்க மாமல்லபுரத்துக்கு...

No comments: